• April 2, 2024

கவலையோடு இருப்பவர்கள் இதை படிக்கவும்!

 கவலையோடு இருப்பவர்கள் இதை படிக்கவும்!

“காலம் முழுவதும் கவலை மட்டுமே என்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறது. என்னை சுற்றிலும் கவலை மட்டுமே இருக்கிறது. கவலையோடு கவலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று எண்ணுபவர்களுக்கு, ஒரு மாற்றத்தை தந்து, அந்த கவலையை காணாமல் செய்ய வைக்கும் இந்த பதிவு..!


எவன் ஒருவன் நன்றாக வாழ வழி இருந்தும், வாழாமல் வறுமையில் வாடுகின்றானோ! அவனைப் பார்த்து மட்டும் சிரித்து விடாதீர்கள். ஏனென்றால் அவன்தான் தன் கனவுக்கான பாதையில் தள்ளாடித் தள்ளாடி, பின் நடந்து நடந்து, இப்பொழுது ஓட முயற்சித்துக் கொண்டிருக்கிறவன்.

தன் கனவுக்கான பாதையில் ஓடிக் கொண்டிருப்பவனைத்தான் வறுமை காதலித்துக் கொண்டிருக்கும். எனவே திறமையிருந்தும் வறுமையில் இருப்பவனை கண்டு, எக்காலத்திலும், எந்நேரத்திலும், அவனை பார்த்து நகைத்து விடாதீர்கள்.

அவனுடைய முயற்சிக்கான ஒரு படிக்கட்டாக நீங்கள் இருக்க முயற்சியுங்கள். ஏனென்றால் அவன் தான், தன் கனவை தேடி, வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒருவன். அந்த ஒருவன் நீங்கலாக கூட இருக்கலாம்.! நம்மை மட்டும் ஏன் வறுமை வாட்டுகிறது. நமக்கு மட்டும் ஏன் எதுவும் அமைய மறுக்கிறது என்று நினைத்து நினைத்து காலத்தை கரைய வைத்து கொண்டிருப்பவர்களாக நீங்கள் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கும் தான்.


வாழ்க்கை என்னும் காட்டாற்று வெள்ளத்தில் கவலைகள் ஒரு சிறு அணைகள். அந்த அணையில் ஓடி வரும் வெள்ளமானது ஒரு சிறு காலம் தங்கலாம், ஆனால் நிரந்தரமாக அங்கே நின்று விடாது. அது போல் தான் நம் வாழ்க்கையும். எவன் ஒருவன் தன் வாழ்நாளில் கவலைகளை மட்டுமே சந்தித்து கொண்டிருக்கிறானோ, அவனுடைய பிற்பாதியில் அவனுடைய எதிர்காலத்தில் அவன் ஒரு நிரந்தரமான தவிர்க்கமுடியாத, யாராலும் தொட முடியாத வெற்றியை தொட போகிறான் என்று அர்த்தம். ஒரு காரியத்திற்காக காத்திருப்பது வேறு; கவலை கொள்வது வேறு. இங்கு நம்மில் பல பேர் காத்துக் கொண்டிருப்பதை தான் கவலை என்று நினைக்கிறார்கள்.

ஒரு ஒரு வயதினருக்கும் ஒரு ஒரு கவலை இருக்கும். எந்த வயதினராக இருந்தாலும் அதிகபட்சமாக கவலை ஒருவருடன் 14 நாட்களுக்கும் மேலாக இருப்பதில்லை. அதற்கு மேலும் இருந்தால் அது கவலை இல்லை பிரச்சனை. நம்மை ஆட்கொண்டுள்ள கவலை நம்மிடமே இருந்துவிடும் நம்மிடமே தங்கிவிடும் என்று எதிர்மறையாக எண்ணாதீர்கள். ஏனென்றால் யாரிடமும் கவலை நிரந்தரமாக தங்குவதில்லை. உங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தான் கவலை உங்களிடம் வருகிறது.

நேர்மறை எண்ணங்கள்

‘உங்கள் தலைக்கு மேல் பறவைகள் பறந்து செல்வதை நீங்கள் தடுக்க முடியாது. ஆனால், அவை உங்கள் தலையில் கூடு கட்டாதபடி உங்களால் தடுக்க முடியும்’. வெகு நேர்த்தியான இந்த இந்த சீனத்து பழமொழி கவலைக்கும் பொருந்தும். எதையும் நேர்மறை எண்ணத்தோடு பார்க்கும் போது, கவலை நம்மிடம் நெருங்குவதில்லை. காகம் என்மேல் காலைக்கடன் செய்துவிட்டதே என்று புலம்பாமல், நல்ல வேலை எருமைக்கு பறக்கும் சக்தி இறைவன் தரவில்லை என்று எண்ணங்கள். 

டாக்டர் ஜார்ஜ் ஸ்டீவன்சன் என்பவர் ஒரு ( How To Deal with your Tension) புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அதில் அவர் , ‘உங்கள் கவலைக்கு எது காரணமோ, அதை வெளியில் சொல்லுங்கள். உள்ளுக்குள்ளாகவே வைத்து புழுங்க வேண்டாம். ஒரு விஷயத்தை ஆராய்ந்து அறியு‍ம் திறன்கொண்ட ஒருவரிடம் அதுபற்றி பேசுங்கள். பேச்சில் வெளிப்படுத்துகிறபோது, பிரச்னையின் கனம் பாதியாய் குறைந்துவிடும். கவலையை போக்கிக்கொள்ளும் வழிமுறையும் கண் கூடாக உங்களுக்கே தெரியவரும்.


உங்களைவிட அறிவிலும், திறமையிலும், அனுபவத்திலும் மேம்பட்டவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுடன் உங்கள் பிரச்னை குறித்து விவாதிக்கிறபோது ‘அட, இதற்குதானா இத்தனை கவலைப்பட்டோம்’ என்று எண்ணி மனம் இலேசாகிவிடும். நம் குணத்தை பாராட்ட இங்கு  இருப்பவர்களை விட, நம் குறைய சொல்ல ஆயிரம் பேர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள்சொன்ன கருத்தை பற்றிய கவலைபடுபவர்கள் தான் இன்று அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் நம்மை கடந்து செல்லும் மேகம் போன்றவர்கள். எனவே அவர்களின் கடினமாக கருத்தை உங்களுடனே வைத்துக்கொள்ளாதீர்கள்.

ஒரு டீ குடிக்கும் நேரம், ஒரு பாடம் கேட்டு முடிக்கும் நேரம் அல்லது கழிவறையில் காலைக்கடன் முடிக்கும் நேரம் வரை மட்டுமே அவர்களை பற்றியும், அவர்களின் கருத்தை பற்றியும் சிந்தித்தால் போதும். நம்மை நொறுங்கவைக்கும் வார்த்தைகளும், நபர்களின் கருத்தையும், நம்மிடம் நிரந்தரமாக இருக்கவைக்கவேண்டாம். அப்படி வைப்பதால் தான் கவலை உங்களிடம் குடிபுகுந்து விடுகிறது. ஒன்றை மட்டும் மனதில் பதியம்போட்டு கொள்ளுங்கள்.

நம்மை வீழ்த்த நினைப்பவர்கள் பயன்படுத்தும், ஆயுதம் உன் மனதை சிதைப்பது. நம் மனதால் நாம் தெளிவாக இருக்கும்வரை நம்மை, ஒருவராலும் வீழ்த்த முடியாது.!

பொதுவாக கவலை எப்போது வரும் தெரியுமா? 

நாம் விரும்பியது கிடைக்காதபோது, நாம் எதிர்பார்த்து நடக்காத போது, நம்முடைய வேலை, பணம் வெற்றி இவை நிலைக்காது என்கிற போது கவலை நம்மிடம் வருகிறது. மனவேதனை, மனஇறுக்கம், உளைச்சல், அச்சம் ஆகியவை மனம் சார்ந்த விதத்தில் மட்டுமல்ல, உடல் சார்ந்த விதத்திலும் விளைவை ஏற்படுத்த கூடியவை. கவலைகளில் இருந்து விடுபட விரும்புகிறவர், தமது வாழ்வில் நடந்தவைகளையும், தாம் இழந்தவைகளையும் முதலில் மறக்கவேண்டும். கெட்டவைகளுக்கு பதிலாக நல்லவைகளைபார்க்க வேண்டும்.  சிரமங்களுக்கு பதிலாக அதில் இருக்கும் வாய்ப்புகளை அறிந்து அவற்றை கற்றுக்கொள்ளவேண்டும்.


இழந்து போனதை பற்றி கவலை கொள்ளாமல், மிச்சம் இருப்பது என்ன? அதை வைத்து என்ன செய்யலாம் என எண்ணுவதே சாலச்சிறந்தது. எனக்கு நல்லது நடக்கவில்லை, கெட்டதுதான் நடந்தது என்று ஏன் கவலைப்படுகிறீர்கள்? கேட்டதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு நல்லது நல்லவர்களுக்கு அமையும். எனவே எப்போதுவும் நல்லவர்களாகவே இருங்கள். 

இதைவிட மிகமிக முக்கியமானது என்ன தெரியுமா? 


தகுதிக்கு மீறியவைகளில் ஆசைப்படுவதும், சாத்தியமற்றவைகளை அடைய முற்படுவதும் நமக்கு என்றும் கவலையை தவிர வேறு எதையும் கொண்டு வராது. எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை வைத்துக்கொள்ள வேண்டும். எல்லை மீறினால் தொல்லைதான். ஒரு கனவு நிறைவேறாவிட்டால் என்ன, இன்னொரு கனவு காணுங்கள்!

இன்றைய மருத்துவ உலகம், உடல்சார்ந்த நோய்களை குணப்படுத்துவதில்வெற்றிகண்டுவிட்டது. ஆனால்,  மன உபாதைகளை குணப்படுத்துவதில் போதிய அளவு வெற்றி காணவில்லை. அச்சமும், கவலையுமே மன உபாதைகளுக்கு முக்கிய காரணிகள். அது இரண்டையும் துரத்திவிட்டாலே, இங்கு பலர் ஆரோக்கியமாக ஆனந்தமாக இருப்பார்கள். 

சேற்றுக்குள் சிக்கிக்கொண்ட வண்டிச்சக்கரம் போல்,  மீண்டும் மீண்டும் கவலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள். கவலையைவிட்டு வெளியே வாருங்கள். மனம் தெளிவாக இருக்கும் நேரத்தில் தீர்வு காணுங்கள். “மழை வந்தவுடன் நனைந்து விடுவோமே” என்ற கவலையில் பறவைகள் எல்லாம் தங்கள் கூடுகளை நோக்கி போகும்போது, கழுகுகள் மட்டும் மேகத்து மேலேயே சென்றுவிடுமாம். இதேபோல் தான் நாமும் பிரச்னையில் இருந்து வெளியே வெளியே வரவேண்டும்.  கவலையை நாம் வெல்லவேண்டும். இல்லையென்றால் கவலை நம்மை வென்றுவிடும்!


பணத்தை சேமித்து கூட பின்னாளில் செலவழிக்கலாம். ஆனால் ஒருபோதும் வாழ்க்கையை சேமித்து வைத்து, பின்னாளில் வாழ முடியாது, வாழ்க்கை வாழ்வதற்கே. இதில் கவலையை கொண்டுவந்து இந்த அழகான வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்.

உங்களை வெறுப்பவர்களை நினைத்து ஒருபோதும் கவலை கொள்ளவேண்டாம். ஏனென்றால், அவர்களுக்கு உங்கள் அன்பை பெற தகுதி இல்லை என நினைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை எப்போதும் இருட்டாகவே உள்ளது என நினைத்து கவலை கொள்ளவேண்டாம். இருளான நேரங்களில் தான் கனவுகள் பிறக்கும்..! என்னை பற்றி கவலை இங்கு கொள்ள யாருமில்லை. நான் ஏன் மற்றவங்களை பற்றி கவலைபடனும்..? என்று எண்ணுபவர்களும் இங்கு சிலர் உண்டு. உங்கள் கவலைகளை விளம்பரம் செய்து எந்த பயனுமில்லை. ஏனென்றால் அவற்றை யாரும் இங்கு வாங்க போவதில்லை.

யாரும் பேசவில்லை என ஒருபோதும் கவலை கொள்ளாதீர்கள். அதற்கு பதிலாக உங்களை புரிந்து கொள்ள இந்த உலகில் யாரும் பிறக்கவில்லை என்று திமிரோடு இருங்கள்.கவலைகளை நிரந்தரமாக்கினால் நாம் நோயாளி. தற்காலிகமாக ஆக்கினால் நாம் புத்திசாலி. கவலையே இல்லாமல் வாழ்ந்தால் நாம் ஞானி..! இதில் எது நீங்கள் என முடிவு செய்துகொள்ளுங்கள். இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டும் என்ற கவலை சிலருக்கு. இப்படியே வாழ்க்கை இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு..!


இந்த உலகத்தில் கவலையே இல்லாதவர்கள் இருவர் தான். ஒருவன் கருவறையில்..! மற்றொருவன் கல்லறையில்..! ஆகா இனி எதற்கும், எப்போதும் , எங்கும் கவலை கொள்ளாதீர்கள். அப்படி உங்களுக்கு கவலை நெருங்கும் பட்சத்தில், இந்த பதிவை மீண்டும் படியுங்கள். உங்களின் நண்பர்கள் யாராவது கவலையோடு இருந்தால், அவர்களுக்கு இந்த பதிவை பகிருங்கள்..

இனி கவலை மறந்து, இருக்கும் இந்த ஒரு வாழ்க்கையை காலம் முழுவதும் வாழுங்கள்.




21 நாட்களில் உங்கவலைகள் அதிகம் உள்ளவர்கள் இதை பாருங்கள்

Watch full video in YouTube and Don’t forget to Subscribe